பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண் :944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.
பொருள்:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.
பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்
Face the danger boldly than live in fear.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்---சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. குழந்தைகள் உதவி எண் என்ன?
விடை : 1098.
2. இறந்த பிறகும் உடலில் எந்தப் பகுதி வளரும்?
விடை: விரல் நகம்
English words & meanings :
Climbing. - ஏறுதல்
Cricket. - மட்டைப்பந்து
வேளாண்மையும் வாழ்வும் :
நல்ல நீரில் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனி ஆறுகளில் உறைந்திருக்கும்
நீதிக்கதை
பூனையின் புதையல் வேட்டை
முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது.
எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.
புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, “பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம் பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார்கள்.
அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, “நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன். உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை” என்று சொன்னது.
அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.
உதவிக்காக அந்தப் பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது. அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது” என்று சொன்னார்கள்.
பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.
இன்றைய செய்திகள் - 14.03.2025
* தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு.
* தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்.
* 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம்: தலைமை அஞ்சல்துறை தலைவர் பெருமிதம்.
* மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
* சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது.
* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு 3-வது இடம்.
* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது